ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆசிரியர் தின நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!
பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும்.
அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்” மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெய்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்!
இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.